தமிழ் மொழி கண்ட அழகியல் உச்சம் கம்பராமாயணம். நாவின் ருசியன்றி வேறொன்றறியாத எனது தலைமுறைக்கு கம்பராமாயணம் ஒருவர் மூலம் தான் தெரியவருகிறது. சாகித்ய அகாதமி விருது பெற்ற ஒரு நவீன எழுத்தாளர், தொடர்ந்து கம்பனை பேசுபவரும் அவர்தான். என்றும் பதினாறான நாஞ்சில்நாடன் தான் அது.
நாஞ்சில் கம்பராமாயணத்தை முறையாக தமிழறிஞரிடம் பாடம் கேட்டவர், கங்கையில் புனிதமான பழையாற்றங்கரைக்காரர் பாடம் கேட்ட இடம் மும்பை. நாஞ்சில் தனது கட்டுரையிலும் கதையிலும் பேச்சிலும் கம்பனை ஓராமல் இருந்ததில்லை.அவரிடமிருந்து ஊக்கம் பெற்று கம்பனை படிக்கத்துவங்கிய எழுத்தாளர்கள் உட்பட பலர் உண்டு.
கனடாவில் உள்ள தமிழ் ஆர்வலர்களால் முன்னெடுக்கப்படும் ஜூம் அமர்வில் 2021ம் ஆண்டு துவக்கத்திலிருந்து நாஞ்சில் தொடர்ந்து கம்பராமாயண உரைகள் ஆற்றுகிறார். தற்போது தமிழ் இணையச்சோலை முன்னெடுக்கும் இந்த நிகழ்வு ரகுராமன், உஷா மதிவாணன், ராம் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்படுகிறது, அவர்களுக்கு நமது நன்றி. ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மாதந்தோறும் நடக்கும் நிகழ்வு இது, கடந்த மாதம் நடந்த நிகழ்வில் யுத்தம் முடிந்து சீதை எரிமீண்டாள் , இன்று நிகழவுள்ள அமர்வில் அல்லது இன்னுமோர் அமர்வில் இது நிறைவுறுகிறது. கம்பனை நாஞ்சில் பேசுவதை வேறு யார் சொன்னாலும் ருசிக்காது, அவர் குரலிலேயே கேட்க வேண்டும். நண்பர்கள் இந்நிகழ்வில் பங்குபெறவேண்டும் என்று அழைக்கிறேன்.
இணையத் தமிழ் சோலை
Comments
Post a Comment