சொந்த அலைக்கழிப்புகளுக்கும் குறைவில்லை. எனக்கும் மகனுக்கும் சிறு அறுவை சிகிச்சைகள். தற்போது விழுப்புரத்திற்கு வீடு மாற்றி விட்டேன் . தினமும் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் 40 கிமீ பயணிக்கிறேன். என்னைப்பற்றி அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கும். மனம் கொந்தளித்து அடங்குவது இடையறாது நடந்துகொண்டே இருந்தது, கீழேழு உலகங்களையும் கண்களால் கண்டேன். இடையில் எதுவும் எழுதாதது போல ஒரு அழுத்தம் ஊறிக்கொண்டே இருந்தது. மனம் செல்லும் திசையை அறிய முடியவில்லை. ஓர் இரவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனை பற்றி எழுதத்துவங்கினேன். சிலநாட்களில் சரஸ்வதி பூஜை வந்தது, அன்று அவரிடம் பேசவும் செய்தேன். இந்த வருடத்தில் இது போன்ற ஆன்மிகமான பல விஷயங்கள் நடந்தன. முன்பு பார்த்திராத அரிய பறவைகள் கண்ணுக்கு தென்படுகின்றன. மனம் அக்கணத்தில் நெக்குருகிப்போகிறது. என்ன நிகழ்கிறது இங்கு, இப்பெருவெளி இந்த மூடனிடம் ஏன் இத்தனை இரக்கம் கொள்ளவேண்டும்.
அமைப்புகளாக செயல்படும் நண்பர்களுடன் இணைந்தும் சில காரியங்கள் செய்தோம், புதுவை இலக்கிய வட்டமான பனை குழுவின் கூடுகைகளில் கலந்து கொண்டேன். பனை புதுவையில் நவீன இலக்கியத்துக்கான ஒரு சாளரமாக அமையும் என நம்புகிறேன். நண்பர் முத்துமாணிக்கம் திருவாசக வாசிப்புக்காக நடத்தும் சைவத்தேன் வலைப்பூவில் மாணிக்க வாசகர் பற்றி எழுதிய கட்டுரையும் கவனம் பெற்றது. சகோதரர் அகரமுதல்வனின் ஆகுதிக்காக நான் ஆனந்தகுமாரசாமியின் சிவானந்த நடனம் புத்தகம் குறித்து சென்னையில் ஒரு உரை நிகழ்த்தினேன்.
எழுதவேண்டும் என்பதை ஒரு மந்திரம் போல அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன். பண்பாட்டு ஆய்வு தற்போது நான் இயங்கும் களம். அதற்காக நிறைய உழைக்கவேண்டியுள்ளது. தகவல் சேகரிக்க வேண்டியுள்ளது. ஒரு தகவலுக்காக ஒருவருடம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த சூழலில் அடுத்த பத்து வருடங்கள் எனக்கு இன்றியமையாதவை. மென்மேலும் இறுகிவரும் புறச்சூழல் என்னை சோர்வடையச்செய்கிறது.
நான் மிகக்கடினமான தருணங்களை கடக்கிறேன். இதுபோன்ற நேரத்தில் உறுதுணையாக இருப்பது எனது மனைவிதான், அவளது தைரியத்தில்தான் சில முடிவுகளை எடுக்கிறேன். இது என்னிடம் எஞ்சியிருக்கட்டும், வாணியை சரண் புகுவோம்.
Comments
Post a Comment